சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது

டெல்லி: சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை.

நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச்சமத்துவத்துக்கு எதிரானது என கோரப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு மீதான விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பில், பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள். கடவுளை வணங்குவதில் ஆண்-பெண் பாகுபாடு இருக்கக் கூடாது. மதத்தில் ஆணாதிக்கக தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து விதமான மத வழிபாடுகளில் ஈடுபட பெண்களுக்கு உரிமை உண்டு. ஐயப்ப பக்கதர்களுக்கு என தனி மத அடையாளம் இல்லை சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசன பிரிவு 21-க்கு எதிரானது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். ஏனைய நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர். பெரும்பாலான நீதிபதிகளின் உத்தரவே இறுதியானதாகும்.

அதன்படி, சபரிமலை கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்ட பெண்களுக்கு இருந்த தடை நீங்கி, அனைத்து வயதுடைய பெண்களும் இனிமேல் கோயிலுக்கும் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.