சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் அன்புமணி ராமதாஸ்? – வைரலாகும் புகைப்படம்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை போட்டிருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
சென்னை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை போட்டிருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தவர், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
இது தொடர்பாக அவர் அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “சபரிமலையில் நடக்கும் பாரம்பரிய விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. இது, எனது தனிப்பட்ட கருத்து. மாதவிடாய் காலங்களிலுள்ள 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் வரக்கூடாது என்ற ஐதீகம் உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது.
நீதிமன்றம் எங்குத் தலையிடலாம் என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லப்படும்போது, அங்குத் தலையிடலாம். கிறிஸ்தவ மதத்தில் போப், பெண்ணாக இருக்க வேண்டும் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்க முடியுமா? முடியாது தானே” என காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ், அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்தார் மரு. அன்புமணி ராமதாஸ்.
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா #Ayyappa pic.twitter.com/O8vQVaYuKo
— veera (@veeratalks) November 26, 2018
இருப்பினும், அவர் எப்போது மலைக்குச் செல்ல இருக்கிறார், எப்போது மாலை அணிவித்தார் என்பது போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.