‘சங் பரிவார்’ பெயரில் பாஜகவினர் போர்க்களத்தை உருவாக்குகிறார்கள்… முதல்வர் ஆவேசம்!
இந்திய அரசியல் நிர்ணய சபை கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா, சர்வதேச அளவில் நமது நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.“இந்தி நம் நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற கூற்று அபத்தமானது. அந்த மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல. அவர்கள் மீது இந்தியை திணிப்பது அவர்களை அடிமைப்படுத்துவது போன்றதாகும். மத்திய அமைச்சரின் அறிக்கை இந்தி அல்லாத பிற மொழிகளை தங்கள் தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு எதிரான போர் கூக்குரல்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பினராயி விஜயன், தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அமித்ஷாவின் கருத்திற்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் இந்தி மொழியை திணிக்க முயல்வதன் மூலம் ‘சங் பரிவார்’ மொழியின் பெயரில் ஒரு புதிய போர்க்களத்தை உருவாக்குகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.