கோவை குப்பை கிடங்கு தீ விபத்து; ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் கட்டுக்குள் வந்தது!
இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் கோவை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
கோவை: இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் கோவை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து
கோவை மாநகராட்சியின் புறநகர் பகுதியான வெள்ளலூர் பகுதியில் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் 700 மெட்ரிக் டன் குப்பைகள் கொட்டப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குப்பை கிடங்கு முழுவதும் பரவிய தீ விடிய விடிய கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், விண்ணை தொடும் அளவுக்கு புகை மூட்டம் எழுந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டு வர அவர்கள் பெரிதும் போராட வேண்டியிருந்தது.
ராணு ஹெலிகாப்டர்
இதையடுத்து, மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சூலூரில் உள்ள விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. ஹெலிகாப்டரில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு குப்பை கிடங்கில் எரியும் தீ மீது ஊற்றப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் முயற்சி செய்தனர்.
IAF chopper involved in controlling the fire in #Vellalore dumpyard in #Coimbatore today. Watch patiently to see the chopper emptying the bucket of water from the sky. @thenewsminute pic.twitter.com/3Y8SB2G2Dl
— Megha Kaveri (@meghakaveri) March 25, 2019
இந்நிலையில், சுமார் 36 மணி நேர கடும் போராட்டத்துக்கு பின்னர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயை கட்டுக்குள் கொண்டு வர Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இணைக்கப்பட்டிருக்கும் பாம்பி பக்கெட் சுமார் 3,500 லிட்டர்கள் தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ள இந்திய விமானப்படை, ராணுவ ஹெலிகாப்டர் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சுமார் 10 முறை பறந்து 19 டன் தண்ணீரை குப்பை கிடங்கில் எரியும் தீ மீது தெளித்ததாக தெரிவித்துள்ளது.
கோடை காலத்தில் எழும் சிக்கல்
குப்பை கிடங்கில் இருந்து இன்னும் புகை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் இதுபோன்ற பிரச்னைகள் வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் வாசிங்க