கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பாட்டி: பேங்க் பேலன்ஸை பார்த்து அதிர்ந்த நகராட்சி ஊழியர்கள்..!
புதுச்சேரி, காந்தி வீதியில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் வாசலில் நிறையப் பேர் பிச்சை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரி, காந்தி வீதியில் இருக்கும் ஈஸ்வரன் கோவில் வாசலில் நிறையப் பேர் பிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களால் கோவிலுக்கு வருபவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகப் பக்தர்கள் நகராட்சியில் புகார் அளித்துள்ளனர். அதனால், நகராட்சி ஊழியர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அனைவரையும் விரட்டி அடித்துள்ளனர்.
ஆனால், அங்குப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டி அங்கிருந்து நகரவே இல்லை. நகராட்சி ஊழியர்கள் அந்த மூதாட்டியிடம் அங்கிருந்து செல்லுங்கள் என்று எடுத்துக் கூறியும் அந்த மூதாட்டி அங்கேயே அமர்த்திருந்துள்ளார்.
அதனையடுத்து, நகராட்சி ஊழியர்கள் அந்த மூதாட்டியைத் தூக்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் விட்டு விடலாம் என்று எண்ணி அந்த மூதாட்டியைத் தூக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த மூதாட்டி பையிலிருந்து பணம், நகை உள்ளிட்டவை கீழே விழுந்து சிதறியுள்ளது.\
அதனைக் கண்டவுடன் அதிர்ச்சி அடைந்த நகராட்சி ஊழியர்கள் பெரிய கடை காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். உடனே, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பாட்டியின் பையில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த பையில் ஒரு பேங்க் பாஸ்புக், 15 ஆயிரம் ரூபாய் பணம், ரேஷன் கார்டு, பென்சன் கார்டு, தங்க நகை உள்ளிட்டவை இருந்துள்ளது. மேலும், அந்த பாஸ்புக்கில் மூதாட்டியின் பேங்க் பேலன்ஸ் 1 லட்சத்திற்கும் மேல் இருந்துள்ளது.
அதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் பெயர் பர்வதம் என்றும் அவர் தனது கணவன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனதால் அதிலிருந்து பிச்சை எடுத்துவருவதாகவும் கூறியுள்ளார். மூதாட்டியிடம் இருந்த பணத்தைப் பாதுகாப்பின் காரணமாக காவல்துறையினர் எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.