கொலைகளுக்கு காரணம் எடப்பாடி தான்: பத்திரிகையாளர் மீண்டும் அதிரடி; அதிர்ச்சியில் ஈபிஎஸ்
கொடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இந்த மர்ம மரணங்களுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேல் என்பவரிடம், வழக்கின் முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேத்யூவை கைது செய்ய சென்னை போலீஸ் டெல்லி விரைந்துள்ளது.
இந்நிலையில், மேத்யூ தற்போது தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் இருந்து சில பத்திரிகையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, கைது செய்ய போலீஸ் வருவதாக கூறுகின்றனர். கொடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக நான் கூறியுள்ளேன். அதற்காக என் மீது எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இப்போதும் தெளிவாக சொல்கிறேன், இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க உண்மையே. கொடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி தான் இருக்கிறார்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.