கொரோனா அச்சுறுத்தல்: தேனி மாவட்டத்தில் நீதிமன்றங்கள் மூடல்
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்ட நீதிமன்றங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீதிமன்றங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க, தீர்ப்புகள் ஒத்தி வைக்கப்பட்ட வழக்குகள் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்குகளின் வாய்தா விவரங்களை இணையதளங்கள் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு, நீதிமன்ற வாயிலில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவசர வழக்குகளை மட்டும் வழக்கறிஞர்களின் அறிவுரைப்படி தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.