கொடநாடு விவகாரம்: தமிழக அரசிடம் சரமாரி கேள்விகளை முன்வைத்த நீதிபதி
கொடநாடு மர்ம மரணங்கள் தொடர்பான வழக்கின் விசாரணையில், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதா, தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சென்னை: கொடநாடு மர்ம மரணங்கள் தொடர்பான வழக்கின் விசாரணையில், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதா, தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களா தொடர்பாக நடைபெற்ற அடுத்தடுத்த மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் என்பவர், புலனாய்வு பத்திரிகையாளர் மேத்யூ சாமுயலிடம் வாக்குமூலம் கொடுத்தனர்.
அது தொடர்பான ஆவணப்படத்தை, பத்திரிகையாளர் மேத்யூ வெளியிட்டதையடுத்து, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.
இந்த நிலையில், இது தொடர்பாக அவதூறு வழக்குப் பதிவு செய்த சென்னை போலீசார், சயான், மனோஜ் இருவரையும் நேற்று கைது செய்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரிதா, கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா? என அரசிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? என்றும் அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது? என்றும் சரமாரியான கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார்.