கேரளாவில் தமிழ் பேசும் தம்பதியரை தாக்கிய விவகாரம்: காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்குப்பதிவு!
கணவன் – மனைவியை சஜீவானந்தன் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியது.
கேரளா: வயநாட்டில் தமிழ் பேசும் தம்பதியரை உள்ளூர்காரர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 11 மணியளவில் பலபேர் முன்னிலையில் ஒருவரை கடுமையாகத் தாக்கினார். அப்போது தாக்குவதைத் தடுக்க வந்த அந்த நபரின் மனைவியையும் ஓங்கி அறைந்து கீழே தள்ளியுள்ளார். இதை அங்கிருந்த யாரும் கேட்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. கணவன் – மனைவியை சஜீவானந்தன் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியது. குறிப்பாகத் தாக்கப்பட்ட இருவரும் தமிழ் பேசுபவர்கள் என தெரியவந்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் சஜீவானந்தம் மீது அம்பலவயல் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, தலைமறைவான அவரைத் தேடிவருகின்றனர். இதனிடையே மாநில மகளிர் ஆணையம் சஜீவானந்தம் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.