கேரளாவில் காரில் இறந்து கிடந்த சி.பி.ஐ அதிகாரி!
கேரளாவில் காரில் சி.பி.ஐ அதிகாரி ஒருவர் இறந்த நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெக்கல் சந்திப்பு அருகே இன்று காலை நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. யாருடைய கார் என்று தெரிந்துகொள்ள அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கார் அருகே சென்றபோது ஒருவர் தூங்குவது போலத் தெரிந்தது. கதவைத் தட்டி அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், அவர் நினைவற்ற நிலையிலிருந்துள்ளார்.
இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், காரின் கதவு பூட்டை உடைத்து பார்த்தபோது, அந்த நபர் இறந்து கிடந்தது தெரிந்தது. உடனடியாக உடலை பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
அவருடைய பர்சை சோதனை செய்தபோது, அவர் சி.பி.ஐ அதிகாரி என்பது தெரியவந்தது. அவர் ஆலப்புழாவில் இருப்பதும் தெரிந்தது. இது குறித்து சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்து கிடந்தது சி.பி.ஐ அதிகாரி என்பதால் அவர் ஒருவேளை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனால், அது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். உடற்கூறு ஆய்வில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.