காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் – அத்தியாயம் -7

 

காவிரி 736; இரண்டாயிரமாண்டு காவிரி சரித்திரம் – அத்தியாயம் -7

நாலாயிரம் ரூபாய்க்கு விலை போன தரங்கம்பாடி

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் “காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

அத்தியாயம் 7

நாலாயிரம் ரூபாய்க்கு விலை போன தரங்கம்பாடி

ஐரோப்பியர் இந்தியாவிற்கு வந்தது ஒரு விபத்துதான். ஒட்டமான்களின் படை அன்று காண்ஸ்டான்டி நோபில் என்று அழைக்கப்பட்ட இஸ்தான்புல்லைக் கைப்பற்றியதில் தொடங்குகிறது ஐரோப்பியர்களின் தேடல்கள்.

1453 மே 29-ம் தேதி நடந்த போரில் ஒட்டமான்கள் தோற்றிருந்தால் கதை வேறாகியிருந்திருக்கலாம். துருக்கியர்கள் கைக்கு இஸ்தான்புல் போனதும். ஐரோப்பியர்களுக்கு இந்தியாவுக்கு போகும் நில வழி அடைக்கப்பட்டுவிட்டது. அவர்கள் கடலில் புதுப்புது வழிகளை தேடினார்கள்.இந்தியாவிற்கு வழி தேடிப் புறப்பட்ட கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததும் அப்படியொரு விபத்து தான்.

ஆனால், வாஸ்கோடகாமா 1498-ஆம் வருடம் மே மாதம் 20- தேதி கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் வந்து இறங்கி விட்டார். 1453-ல் ஐரோப்பியர்களுக்கு அடைக்கப்பட்ட வழியை 1498-ல் வாஸ்கோடகாமா திறந்துவிட்டார். எல்லா ஐரோப்பிய நாடுகளும் ஆளுக்கொரு கிழக்கிந்திய கம்பெனிகளைத் துவங்கின.

போர்ச்சுக்கீசியர்கள் இந்தியா வந்து நிலை கொண்டு கிட்டத்தட்ட 150 வருடத்திற்கு பிறகு 1612-ஆம் ஆண்டில் தான் டட்ச் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது. ஹாலந்தில் இருந்து தரங்கம்பாடிக்கு 1616-ஆம் ஆண்டு புறப்பட்ட கப்பல் ஒன்று தரங்கம்பாடிக்கு அருகில் உடைந்து கடலில் மூழ்கியது. அதிலிருந்து தப்பி கரைசேர்ந்த கப்பலின் தலைவன் ‘ரோலண்ட் கிரேப்’ என்பவன் தன்னை காப்பாற்றி கரை சேர்த்த கடவுளுக்கு அங்கே ஆலயம் அமைப்பதாக வேண்டிக் கொண்டானாம். அது எத்தனை உண்மை என்று தெரியாது!! இந்த ரோலண்ட் கிரேப்தான் இந்தியாவில் டட்ச் காலனிக்கு அடிகோலியவன்.

அன்று தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரை, ஹாலந்து அரசுப் பிரதிநிதி என்கிற முறையில் சென்று சந்திக்கிறான் ரோலண்ட். அந்த சந்திப்பின் போது, அவருடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வணிகம் நடத்த அனுமதி கேட்கிறான். கிடைக்கிறது.

தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டி ஐந்து மைல் நீளமும், மூன்று மைல் அகலமும் கொண்ட பகுதியை குத்தகைக்கு தருகிறார் ரகுநாத நாயக்கர். கிட்டத்தட்ட 40 சதுர கிலோமீட்டர். வருட குத்தகை எவ்வளவு தெரியுமா?? நாலாயிரம் ரூபாய்…

டச்சுகாரர்கள் அந்த இடத்தில் ஒரு கோட்டையை கட்டி, அதற்கு ‘ஜோகன்ஸ்பர்க் கோட்டை’  என்று பெயரிட்டார்கள். டச்சுகாரர்கள் மற்ற ஐரோப்பியர்களை போல் காலிகோ துணி வியாபாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் அவர்களது ஆர்வம் வாசனை திரவியங்கள் மேல் இருந்தது.

ஜோகன்ஸ்பர்க் என்கிற இந்த கோட்டையை தவிர, இன்று சதுரங்கப்பட்டணம் என்று அழைக்கப்படுகின்ற ஷட்ரஸ் பழவேற்காடு ஆகிய இடங்களிலும் அவர்கள் கோட்டையை கட்டி துறைமுகங்களை உருவாக்கி தங்கள் வணிகத்தை தொடங்கினார்கள்.

அப்போது டட்ச் நாட்டை ஆண்டது நான்காம் கிறிஸ்டியன் என்கிற மன்னன். அவர், இந்தியாவில் வணிகம் செய்யும் தங்கள் நாட்டு கம்பெனிக்காக தனி நாணயங்களை வெளியிட்டார். அந்த நாணயத்தில் தரங்கம்பாடி, ஜோகன்ஸ்பர்க் கோட்டையின் படமும், DUTCH EAST INDIAN COMPANY என்பதன் சுருக்கமாக D.E.C என்கிற எழுத்துகளும் பொறிக்கப்பட்டன.

இரண்டு காசுகள் முதல் 100 காசுகள் வரை பல எண்ணிக்கையில் நாணயங்கள் வெளியிடப்பட்டன. டட்ச் கிழக்கிந்திய கம்பெனி லாபகரமாக நடக்காததால் மன்னரிடம் பெற்ற கடனுக்காக 1624-ல் அதாவது சரியாக 12 ஆண்டுகளில் மன்னரின் உடமை ஆயிற்று தரங்கம்பாடி. அதோடு தரங்கம்பாடி, சதுரங்கப்பட்டினம் பழவேற்காடு ஆகியவை நேரடி டட்ச் காலணிகள் ஆகின. 

தொடரும்……..

ஐரோப்பியர்களை அசரவைத்த தமிழர்கள்