கார்த்தியின் ’உழவன் ஃபவுண்டேஷன்’: விவாசாயிகளுக்கு உழவன் விருதுகள், ரூ.5 லட்சம் நிதியுதவி
நடிகர் கார்த்தி ’உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு விருதுகளும் ரூ.5 லட்சம் நிதி உதவியும் வழங்கியுள்ளார்
சென்னை: நடிகர் கார்த்தி ’உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு விருதுகளும் ரூ.5 லட்சம் நிதி உதவியும் வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி தற்போது ’உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தில் அவர் விவசாயியாக நடித்துள்ளார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. இப்படத்தின் தாக்கத்தால் நடிகர் கார்த்தி ‘உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது. “அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியமும் சந்தோஷமும் பெருக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு, விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் ஏதாவது உதவிகள் செய்யவேண்டுமென்ற ஆர்வம் எல்லாருக்கும் இருந்தது. உழவன் அறக்கட்டளை அதாவது ’உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற புது அமைப்பை ஆரம்பித்துள்ளோம். அதில் முதல் விதையாக அண்ணன் சூர்யா ரூ.1 கோடி நிதியாக வழங்கியுள்ளார். ’உழவன் ஃபவுண்டேஷன்’சார்பில் இந்த வருடம் உழவன் விருதுகள் தொடங்கி உள்ளோம்.
அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.#உழவன்ஃபவுண்டேஷன் #உழவன்விருதகள் #பயிர்செய்யவிரும்பு @UzhavanFDN pic.twitter.com/D3Q3k1nxUB
— Actor Karthi (@Karthi_Offl) January 15, 2019
இந்நிலையில், விவசாயத்தையும் விவசாயிகளை போற்றும் வகையிலும், அவர்களை பெறுமை சேர்க்கும் விதத்திலும் இந்த விருது இருக்கும். ’ஜீ’ தொலைக்காட்சியுடன் இணைந்து இந்த வருடம் உழவன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. கஜா புயலில் டெல்டா மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் இயற்கை விவசாயத்தை லாபகரமாக செய்துகொண்டிருக்கும் 5 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்பட்டது. அந்த விவசாயிகள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார்கள். இது உழவன் ஃபவுண்டேஷனின் முதல் படி மட்டுமே, இது பல விவசாயிகளை பயனடைய வைக்கும், இதில் நுகர்வோர்களாக இருக்கும் நாம் அவர்களுக்கு என்ன நன்றி கடன் செலுத்த முடியுமோ அது நிச்சயம் செய்ய வேண்டும். இது உங்கள் அன்போடும், நட்போடும் மென்மேலும் வளர வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்”. என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.