காந்தி உருவ பொம்மையை எரித்த வழக்கு: பெயிலில் வந்தவர்களுக்கு இந்து மகா சபை பாராட்டு விழா

 

காந்தி உருவ பொம்மையை எரித்த வழக்கு: பெயிலில் வந்தவர்களுக்கு இந்து மகா சபை பாராட்டு விழா

காந்தி உருவ பொம்மையை சுட்டு எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெயிலில் வந்தவர்களுக்கு, இந்து மகா சபை பாராட்டு விழா நடத்தியுள்ளது.

அலிகார்: காந்தி உருவ பொம்மையை சுட்டு எரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெயிலில் வந்தவர்களுக்கு, இந்து மகா சபை பாராட்டு விழா நடத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 30-ஆம் தேதி காந்தி நினைவுநாள் அன்று, அவரது உருவ பொம்மையை இந்து மகா சபையின் தேசிய செயலாளர் புஜா ஷாகுன் பாண்டே துப்பாக்கியால் சுடுவது போல் வீடியோ வெளியிட்டார். காவி கும்பல்கள் காந்தி உருவ பொம்மையை எரித்து கோட்சே வாழ்க என கோஷமிடும் காட்சியும் அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் ஷாகுன் பாண்டே உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பிப்ரவரி 14-ஆம் தேதி பெயிலில் வந்த இவர்களுக்கு இந்து மகா சபை பாராட்டு விழா நடத்தியுள்ளது.

இந்து மகா சபையின் தேசிய தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், பகவத் கீதையையும் வாளையும் கொடுத்து அவர்களை பாராட்டினார். காந்தி உருவபொம்மை எரிப்பு வழக்கில் இந்து மகா சபை சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். பாராட்டு விழா முடிந்த பின்பு உணவு விருந்தும் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை காவல்துறையினர் வீடியோ ரெக்கார்ட் செய்திருக்கின்றனர். இதுகுறித்து ஷாகுன் பாண்டேவின் கணவர் அசோக் பாண்டே, எங்களுக்கு காவல்துறை மீது பயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.