காதல் திருமணத்தால் மரியாதை இல்லை: மகனை கொன்று எரித்த தாய்; உண்மை நிலவரம் என்ன?

 

காதல் திருமணத்தால் மரியாதை இல்லை: மகனை கொன்று எரித்த தாய்; உண்மை நிலவரம் என்ன?

சென்னை: காதல் திருமணத்தால் தனது பெற்றோரின் அரவணைப்பு இல்லாததால் மகனை தாயே கொன்று தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருடைய மகள் மீனாட்சி. இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஜெயகாந்த் என்ற மகன் இருந்தான். அவன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மீனாட்சி, அவ்வப்போது தனது கணவருடன் கோபித்துக்கொண்டு மகனுடன் கரையான்சாவடியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிடுவார்.

கடந்த 27-ந்தேதி தனது மகன் ஜெயகாந்துடன் தாய் வீட்டுக்கு வந்த மீனாட்சி, அருகில் உள்ள தனி வீட்டில் தங்கி இருந்தார். நேற்று காலை ராஜேஸ்வரி, பேரன் எங்கே? என மகள் மீனாட்சியிடம் கேட்டார்.
அதற்கு அவர், “நான் அவனை கொலை செய்துவிட்டேன். என்னை காப்பாற்று” என தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி, அவன் எங்கே? என்றார். உடனே மீனாட்சி, அந்த வீட்டின் பின்புறம் தனது தாயை அழைத்துச்சென்று அங்கிருந்த தரைமட்ட தொட்டி மீது போடப்பட்டு இருந்த இரும்பு தகரங்களை அகற்றினார். அதில் தொட்டியின் உள்ளே பேரன் ஜெயகாந்த், உடல் கருகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு ராஜேஸ்வரி அலறினார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில்  பூந்தமல்லி போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து  சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மீனாட்சியை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- மீனாட்சிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.  தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலன் திருமணம் செய்து கொண்டதால் தனது தாய் வீட்டிலும், கணவர் வீட்டிலும் தனக்கு அரவணைப்பு இல்லையே? என அவர் மனம் நொந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகன் ஜெயகாந்தை, கொலை செய்து விட்டு, அவனது உடலை வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் போட்டு, மண்எண்ணெய் ஊற்றி எரித்தார்.
பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஆனால் பயத்தால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெற்ற தாயே மகனை கொன்று எரித்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.