காதலி கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன்… கையில் ரோஜாவுடன் பூங்காவில் காத்திருந்த இளைஞர்

 

காதலி கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன்… கையில் ரோஜாவுடன் பூங்காவில் காத்திருந்த இளைஞர்

காதலி கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன், ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று இளைஞர் ஒருவர் ரோஜா பூவுடன் பூங்காவில் சுற்றித்திரிந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது

திருப்பூர்: காதலி கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன், ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று இளைஞர் ஒருவர் ரோஜா பூவுடன் பூங்காவில் சுற்றித்திரிந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று காதலர் தினம் என்பதால் வழக்கம்போல் ஏராளமான இளம் ஆண்களும், பெண்களும் காதலை வெளிப்படுத்தி மகிழ்ச்சியுடன் நாளை கழித்தனர்.

ஆனால் திருப்பூரில் ஒரு இளைஞர் லவ் பண்ணாதான் வீட்டுக்கு போவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நேற்று காலை முதலே ஜோடி ஜோடியாக காதலர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். இருந்தாலும் போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில்தான் இருந்தனர்.

love

அப்போது ஒரு இளைஞர் பார்க் உள்ளே வந்தார். கையில் ரோஜா பூ வைத்திருந்தார். மற்ற காதலர்கள் ரோஜா பூவை பரிமாறிக் கொண்டு, கேக், சாக்லட்டை ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டுக் கொண்டும் மகிழ்ச்சியாக இருந்ததை ஏக்கத்துடன் பார்த்தார்.

love

பிறகு ரோஜா பூவுடன் அந்த பார்க்கையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார். இதை அங்கிருந்த காதலர்கள், போலீசார், வாட்ச்மேன் உட்பட எல்லோருமே கவனித்தார்கள். ஆனாலும் அந்த இளைஞர் கண்களை துழாவிக் கொண்டே யாராவது தன் காதலை ஏற்கமாட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தவாறே பார்க்கில் நடந்து கொண்டிருந்தார்.

love

இதனால் மனசு கேட்காமல் சிலர் இளைஞரை கூப்பிட்டு விசாரித்தனர். அப்போது அவர் பெயர் சண்முக பிரகாஷ் என்பதும் சொந்த ஊர் நத்தம் என்றும் சொன்னார். வயது 28 ஆகிறதாம். திருப்பூரில் ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறாராம். தொடர்ந்து சண்முக பிரகாஷ் சொன்னதாவது:

“எனக்கு ரொம்ப வருஷமா வீட்டில் பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. ஒன்னும் செட் ஆகல. புரோக்கர்களுக்கே இதுவரைக்கும் ரூ.60 ஆயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு (அட பரந்தாமா.. இதை வச்சு ஒரு வேளை கல்யாண சாப்பாடு போட்டிருக்கலாமே). உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தாலும் சொல்லு, கல்யாணம் பண்ணி வெக்கிறோம்னு வீட்டில சொல்லிட்டாங்க. ஆனா இதுவரைக்கும் எனக்கு லவ் எதுவும் அமையல.

love

அதான் எனக்கான காதலியை இங்கே தேடிட்டு இருக்கேன். நிச்சயமா அவளை தேடி கண்டுபிடிச்சிட்டு, இந்த ரோஜாப்பூவையும் அவள்கிட்ட தந்துட்டு, என் காதலையும் சொல்லிட்டுதான் இங்கிருந்து வீட்டுக்கு போவேன்” என்று கண்ணீருடன் சொன்னார்.

இதைக் கேட்டதும் சுற்றி நின்றவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திரும்பவும் அந்த இளைஞர் ரோஜாப்பூவுடன் சுற்றிக் கொண்டே இருந்தார். இப்படியே சாயங்காலம் ஆகிவிட்டது. கடைசி வரை காதலி கிடைக்கவே இல்லை. அதனால் வாடிப்போனது ரோஜா மட்டுமல்ல.. அந்த ராஜாவின் மனதும்தான்.. வேறு வழியே இல்லாமல் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அந்த பார்க்கை விட்டு கிளம்பி சென்றார்.