காதலருடன் சேர்ந்து பைக் ஓட்டி பழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: கதறும் பெற்றோர்!
குன்றத்தூரில் காத்திருந்த அண்ணாமலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை: இருசக்கர வாகனம் ஓட்ட பழகிய போது ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அருகில் இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதைக்கண்ட அப்பகுதி வாசிகள் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், காயமடைந்த அந்த நபரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் காயமடைந்தவர் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியை சேர்ந்த அண்ணாமலை என்பதும், இறந்துபோன பெண் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்த அபிநயா என்பதும் தெரியவந்தது. காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் ஷோரூமில் அபிநயாவும், அண்ணாமலையும் சேர்ந்து பணி செய்துள்ளனர். இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அபிநயா அந்த வேலையைவிட்டு நின்றுள்ளார்.
தற்போது அங்குக் கொடுக்கப்படவேண்டிய சம்பளப் பாக்கியை வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அவரை குன்றத்தூரில் காத்திருந்த அண்ணாமலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் காதலர்கள் இருவரும் உற்சாகமாக இருசக்கர வாகனத்தில் செல்ல, அபிநயாவுக்கு வண்டிஓட்ட கற்றுக்கொடுப்பதாகக் கூறி அவரை முன்னால் அமரவைத்து அண்ணாமலை பயிற்சி அளித்துள்ளார். அப்போது இருசக்கர வாகனமானது நிலைதடுமாறி சாலையின் தடுப்புச் சுவரில் உள்ள கம்பியின் மீது மோதியுள்ளது. இதில் அபிநயா முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் அண்ணாமலை பலத்த காயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பளம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற பெண் பிணமாக வந்துள்ளதை எண்ணி அபிநயாவின் பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்க செய்துள்ளது.