காஞ்சிபுரம் அருகே வெடித்தது பேரீச்சம்பழத்திற்கு போடப்பட்ட ராணுவ ராக்கெட்?

 

காஞ்சிபுரம் அருகே வெடித்தது பேரீச்சம்பழத்திற்கு போடப்பட்ட ராணுவ ராக்கெட்?

வாங்கின வியாபாரிக்கும் அதனுள் இருக்கும் விபரீதம் புரியவில்லை. ஸ்க்ராப் என நினைத்து பழைய இரும்பு சாமான்கள்மேலே வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு, குட்டி யானையில் ஊர்ஊராக ‘பழைய இரும்பு சாமானுக்கு பேரீச்சம்பழம்’ என சுற்றிவந்திருக்கிறார்.

காஞ்சிபுரம் அருகே அனுமந்தபுரம் என்ற இடத்தில் ராணுவத்திற்கு சொந்தமான பயிற்சி மையம் உள்ளது. ராணுவத்தினருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கும் இந்த மையத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு, பயன்பாட்டில் இல்லாத பழைய இரும்பு பொருட்களை வியாபாரி ஒருவர் வாங்கி சென்றுள்ளார். அதிகாரிகள் தவறோ இல்லை கவனக்குறைவோ தெரியவில்லை, பழைய இரும்பு சாமான்களுக்குள் ராக்கெட்டை பற்ற வைக்கும் பொறியும்,, சில வெடிக்காத ஷெல்களும் சேர்த்து விலைவைத்து விற்கப்பட்டிருக்கின்றன. வாங்கின வியாபாரிக்கும் அதனுள் இருக்கும் விபரீதம் புரியவில்லை. ஸ்க்ராப் என நினைத்து பழைய இரும்பு சாமான்கள்மேலே வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு, குட்டி யானையில் ஊர்ஊராக ‘பழைய இரும்பு சாமானுக்கு பேரீச்சம்பழம்’ என சுற்றிவந்திருக்கிறார். அவ்வாறு ஊர் சுற்றும்போது காஞ்சிபுரம் கங்கை அம்மன் கோவில் குளமருகே வரும்போது தெரிந்தோ தெரியாமலோ மேற்படி விபரீத ஆயுதங்கள் கீழே விழுந்து மண்ணில் புதையுண்டன.

Gangai Amman temple

அந்த கங்கை அம்மன் கோவில் குளத்தில் ஒரு அத்திவரதர் இல்லாமல் போனதன் விளைவு, குளத்தின்பக்கம் ஒருவரும் வருவதில்லை. திடீரென கடந்த ஞாயிறு மதியம் நண்பர்கள் ஆறேழு பேர் அந்தப்பக்கமாக போகும்போது, ராக்கெட் பொறி வெளியே தெரிந்திருக்கிறது. தீபாவளிவேறு பக்கத்தில் வருவதால், அதனை சாதாரணமாக கருதி தூக்கிப்போட்டு விளையாடிருக்கிறார்கள். திடீரென பொறி வெடித்து இருவர் இறக்க, படுகாயத்துடன் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். காஞ்சிபுரத்தில் குண்டுவெடிப்பா? இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் வந்ததெல்லாம் உண்மைதானா? என காவல்துறை அலறி அடித்து ஓடிவந்து பார்த்த காவல்துறையின் விசாரணையில் ஸ்க்ராப் மெட்டீரியல் என தெரியவந்திருக்கிறது. பக்கத்துலேயே வெடிக்காத ஷெல் ஒன்றும் கிடந்திருக்கிறது. நல்லவேளையாக அவர்கள் இந்த ஷெல்லோடு விளையாடவில்லை, ஒருவேளை அப்படியாகிருந்தால், இன்னும் விபரீதமாகியிருக்கும்!