கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியை: தற்கொலை செய்து கொண்ட காதலன்!
வகுப்பறையிலேயே ஆசிரியை ரம்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருநாவலூர்: வகுப்பறையிலேயே ஆசிரியை ரம்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தனியார் பள்ளியில் பணிபுரிபவர் ரம்யா. இவரை விருட்சம் குப்பத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் பல ஆண்டுகளாக ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இவர் காதலை ரம்யாவிடம் வெளிப்படுத்திய போது அதை ஏற்காத ரம்யா இதுகுறித்து பெற்றோரிடம் பேசுமாறு கூறியுள்ளார்.
ரம்யாவின் வீட்டிற்கே சென்று கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெண் கேட்டும், சாதியை காரணம் காட்டி ரம்யாவின் பெற்றோர் ராஜசேகரை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆசிரியை ரம்யாவுக்கு தினமும் தொந்தரவு அளித்து வந்துள்ளார் ராஜசேகர். இறுதியாக இவருக்கும் திருமணம் நடக்காது என்று முடிவெடுத்த ராஜசேகர், ரம்யாவை கொலை செய்ய அவர் பணிபுரியும் குறிஞ்சிப்பாடியில் உள்ள காயத்ரி மெட்ரிகுலேசன் தனியார் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் அமர்ந்து இருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து ராஜசேகர் தப்பியோடியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ராஜசேகர் குறித்து விசாரணை நடத்தி, தொடர்ந்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருநாவலூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.