கள்ளக்காதல் அதிகரிக்க சினிமா காரணமா? ; மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
இந்திய அளவில் நடக்கும் கொலைகளில் பெரும்பான்மையாவை கள்ளக்காதலால் நடைபெறுகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சினிமா மற்றும் டிவி தொடர்களின் தாக்கம் காரணமா என மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்திய அளவில் நடக்கும் கொலைகளில் பெரும்பான்மையாவை கள்ளக்காதலால் நடைபெறுகிறது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சினிமா மற்றும் டிவி தொடர்களின் தாக்கம் காரணமா என மத்திய, மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான அஜித்குமார் என்பவர் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, கள்ளகாதலால் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து வேதனை தெரிவித்தனர்.
சமுதாயத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாய் மாறியிருக்கும் கள்ளக்காதல் அதிகரிக்க என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஒரு குழு உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்காதல் எதனால் நடக்கிறது, சினிமா மற்றும் டிவி தொடர்களின் தாக்கம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறதா என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதேபோல் திருமணமான தம்பதியருக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் மையம் அமைப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் வருகிற ஜூன் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.