கணவனை பிரிந்த பெண் மீது ஆசிட் வீச்சு; சேலத்தில் பயங்கரம்

 

கணவனை பிரிந்த பெண் மீது ஆசிட் வீச்சு; சேலத்தில் பயங்கரம்

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இது போன்ற செயல்கள் அதிகரித்து வருவது பெரும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது எனவே இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு உடனடியாக இறங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் அருகே உள்ள எஸ்.பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவரும், குகை லோகுசெட்டி தெருவை சேர்ந்த காயத்ரி (வயது 31) என்பவரும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆனால் பாலமுருகனுக்கும், காயத்திரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் பாலமுருகனுடன் கோபித்துக் கொண்டு, காயத்ரி வீட்டை விட்டு வெளியேறி குழந்தைகளுடன் குகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த சூழலில் இன்று காலை 2 மகன்களையும் பள்ளியில் விடுவதற்காக காயத்ரி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் சென்றார். அவர் குகை மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, மர்ம நபர் ஒருவர் திடீரென வாகனத்தை வழிமறித்து காயத்ரியின் முகத்தில் ஆசிட்டை வீசினார்.

இதில் காயத்ரியின் முகத்தின் வலது பக்கம், நெஞ்சு பகுதி, கால் பகுதி கடுமையாக வெந்து போனது. பொதுமக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து காயத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காயத்திரி மீது ஆசிட் வீசியவர் பக்கத்து தெருவை சேர்ந்த மரம் அறுக்கும் தொழிலாளி சீனிவாசன்(40) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 

இவருக்கும் காய்த்ரிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அறிந்த காயத்ரியின் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் சீனிவாசனுடன் பழகுவதை காயத்ரி நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் ஆசிட் வீசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாகி இருக்கும் சீனிவாசனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.