கட்டியை கர்ப்பம் என்று கூறி 7 மாதம் சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள்: அதிர வைக்கும் சம்பவம்!
திருமணமாகி ஓராண்டான நிலையில் அஸ்வினி கடந்த மார்ச் மாதம் கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி: வயிற்றிலிருந்த கட்டியைக் கர்ப்பம் என்று கூறி 7 மாதம் சிகிச்சை அளித்து வந்த கொடுமை கிருஷ்ணகிரியில் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன். இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டான நிலையில் அஸ்வினி கடந்த மார்ச் மாதம் கல்லாவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் கடந்த 7 மாத காலமாக அஸ்வினிக்கு கர்ப்பிணிக்கான சிகிச்சை மருத்துவமனை மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அஸ்வினி கடந்த 19 ஆம் தேதி வயிற்று வலி அதிகமாக இருப்பதாகக் கூறி மருத்துவமனை சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் கூற, ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சிந்தனாசங்கர் , பாதிக்கப்பட்டவர்களின் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.