கடைசி பந்து வரை திக்…திக்! இறுதியில் த்ரில் வெற்றி: 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா

 

கடைசி பந்து வரை திக்…திக்! இறுதியில் த்ரில் வெற்றி: 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது இந்தியா

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி 7-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது

துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி 7-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்றது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்று முடிவில் இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேச அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் ஓய்வு பெற்ற ரோகித் ஷர்மா இந்தப் போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய லிதன் தாஸ் 121 ரன்களை குவித்தார். மெஹ்டி ஹாசன் 33 ரன்களும், சவும்யா சர்கார் 32 ரன்களும் எடுத்தனர். மற்ற வங்காளதேச வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இலக்கை சேஸ் செய்தது.

இந்திய அணியில் ரோகித் ஷர்மா 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களும், தோனி 36 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 23 ரன்களும், கேதார் ஜாதவ் 23 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. ஆனால், தட்டுதடுமாறி கடைசி பந்தில் இலக்கை எட்டி இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 7-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.