ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக 47-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதலால் எம்ஜிஆர் அக்கட்சியில் இருந்து பிரிந்து அதிமுக கட்சியை தொடங்கினார். அதன் பிறகு கிட்டத்தட்ட மூன்று முறை எம்ஜிஆர் தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தார். அவரது மறைவை அடுத்து அதிமுகவின் அடுத்த ஆளுமையாக ஜெயலலிதா உயர்ந்து நின்றார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகளால் தமிழகத்தில் அதிமுக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நின்றது. ஆனால் ஜெயலலிதாவும் மறைந்த பிறகு அதிமுக ஆட்டம் கண்டது. இருப்பினும் நீண்ட இழுத்தடிப்பிற்கு பின் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அதிமுகவை வழிநடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழா ராயப்பேட்டையில் இருக்கும் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனையடுத்து அதிமுக கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த விழாவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.