ஒரே நாளில் ஹோமியோபதி டாக்டராகலாம்…போலி நிறுவனம் நடத்திய மூவர் கைது!
ஹோமியோபதி கல்வி நிறுவனம் நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக போலீசில் புகார் அளித்தார்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி பதிவாளர் ஆவுடையப்பன், போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம் நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முன்னாள் விமானப்படை அதிகாரியான கனக திருமேனி தன்னை ஹோமியோபதி மருத்துவர் என்று கூறி கொண்டு சென்னை கோயம்பேட்டில் ஹோமியோபதி நிறுவனம் ஒன்று நடந்து வந்துள்ளார். இதில் ஒரு நாள் வகுப்பு நடத்தி போலி சான்றிதழ் அளித்துள்ளார். இவருடன் சேர்ந்து சகோதரர் கனக ஞானகுரு மற்றும் பார்த்திபன் என்பவருடன் சேர்ந்து இந்த பாரம்பரிய மாற்று ஹோமியோபதி மருத்துவ வகுப்பை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொருவரிடமும் 5 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் பணம் வசூலித்துள்ளனர்.
இது தொடர்பாக மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் கனக திருமேனி அலுவலகத்திலிருந்து நூற்றுக்கணக்கான போலிச் சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர். இவர்களின் இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு போலிச் சான்றிதழ் பெற்ற நபர்களை கண்டுபிடிக்கத் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ குழுவினர் பட்டியல் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.