ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு : சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி !
மாணவர் சங்கத் தலைவர் அஸ்வத்தாமன், சென்னை ஐஐடி கல்லூரியிலேயே இது வரை 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ஐஐடி மாணவி பாத்திமா, அவர் தங்கியிருந்த பெண்கள் விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, நேரில் ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் துறை ஆணையர், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அவரது மரணத்திற்கு அந்த கல்லூரியில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்கள் தான் காரணம் என்று பாத்திமா அவரது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். அதன் படி, மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அந்த பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டில் இருந்து இதுவரை 5 மாணவர்கள் அந்த கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இந்நிலையில் இந்தியத் தேசிய மாணவர் சங்கத் தலைவர் அஸ்வத்தாமன், சென்னை ஐஐடி கல்லூரியிலேயே இது வரை 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றும் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், மத்திய குற்றப்பிரிவு குழுவிலேயே இரண்டு ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மாணவர் சங்கத் தலைவர் அஸ்வத்தாமன் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.