ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம்

 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியாவின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவர், தான் பெற்ற மகளான ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக இன்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தும்படி கடந்த மாதம் தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்திராணி முகர்ஜி, பாட்டியாலா நீதிமன்றத்திற்கு எழுதிய கடிதத்தில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாற விரும்புவதாகவும், தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.