ஏப்ரல் 9ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது…..ஒடிசா அரசு உத்தரவு..

 

ஏப்ரல் 9ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது…..ஒடிசா அரசு உத்தரவு..

ஒடிசாவில் வரும் 9ம் தேதி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால், வாய் மற்றும் மூக்கை மறைக்கும் மாஸ்க்கை அணிந்துதான் வர வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதுமாக 21 நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வரும் 14ம் தேதி இந்த ஊரடங்கு முடிவடையும். ஊரடங்கு அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பலியானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது.

ஒடிசா அரசு

இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக ஒடிசா அரசு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிக அக்கறை காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் பொதுமக்கள் வீட்டை வெளியே வருவதாக இருந்தால் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் கிடைக்கக்கூடிய மாஸ்க்குகளை கட்டாயம் அணிந்துதான் வர வேண்டும். வரும் 9ம் தேதி காலை 7 மணி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக ஒடிசா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முகமூடி வகைகள்

மேலும், மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகள் தங்களது பகுதிகளில் மக்கள் கூட்டம் தவிர்க்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மக்கள் எப்போதும் மாஸ்க் அணிந்துகொண்டும், சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். யாராவது பிளாஸ்டிக் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் முகமூடியை பயன்படுத்தினால் அதனை முறையாக அகற்றுவதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது.