‘என்.ஜி.கே’ அப்டேட்: சூர்யா ரசிகர்களிடம் செல்வராகவன் வேண்டுகோள்!

 

‘என்.ஜி.கே’ அப்டேட்: சூர்யா ரசிகர்களிடம் செல்வராகவன் வேண்டுகோள்!

சென்னை: ‘என்.ஜி.கே’ படம் குறித்த தகவலுக்காக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களிடம் இயக்குநர் செல்வராகவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே’ திரைப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலம் சரியில்லாததால் ‘என்.ஜி.கே’ ஷூட்டிங் தாமதமானது.

இதன் காரணமாக ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானதால் சூர்யா ரசிகர்கல் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், ’என்.ஜி.கே’ குறித்த ஏதேனும் ஒரு அறிவிப்பு வராதா என்று காத்திருந்த ரசிகர்கள், தயாரிப்பாளரையும், இயக்குநரையும் மாறி மாறி நச்சரிக்கத் தொடங்கினர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் செல்வராகவன், ’என் மனமார்ந்த வேண்டுகோள். நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். 3 நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள ‘என்.ஜி.கே’ ஷூட்டிங்கில் பங்கேற்கவிருக்கிறார். இதுவே இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் என கூறப்படுவதால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ‘என்.ஜி.கே’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.