என்னை ‘தெர்மாகோல் விஞ்ஞானி’யாக மாற்றியது இவர் தான்? உண்மையை உடைத்த செல்லூர் ராஜு
வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க ஆற்றில் தெர்மாகோல் அட்டைகளை விட்ட திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.
மதுரை: வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க ஆற்றில் தெர்மாகோல் அட்டைகளை விட்ட திட்டம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கமளித்துள்ளார்.
தெர்மாகோல் திட்டம்:
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடந்த 2107 ஆம் ஆண்டு வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க புது முயற்சியாக அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகளால் மூடினார். ஆனால், நீர் நிலைகள் மேல் மூடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் கரை ஒதுங்கியதால் இத்திட்டம் தோல்வியடைந்தது.
மீம்ஸ்களும், கமென்ட்டுகளும்….
இதையடுத்து சமூக வலைதளங்களில் இத்திட்டம் குறித்து பல வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. செல்லூர் ராஜுக்கு எதிராக மீம்ஸ்களும், கமென்ட்டுகளும் பறந்தன. தெர்மாகோல் விஞ்ஞானி, தெர்மாகோல் சாதனையாளர் என்று அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை செல்லூராரை சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளினர்.
மனம் தளராத விக்கிரமாதித்தன்
ஆனால் வேதாளத்தின் கேள்விகளுக்கு சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை மாதிரி, செல்லூர் ராஜுவோ, இந்தத் தெர்மாகோல் திட்டத்துக்கு பலரும் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் பாராட்டுகள் வருகின்றன. அணைகளில் நீர் ஆவியாவதைத் தடுக்க மேலும் முயற்சிகள் எடுக்கப்படும்’ என்று கூலாக சொல்லிவிட்டு அடுத்த திட்டத்தை நோக்கி நடையை கட்டினார்.
அது பொறியாளர் செய்த தவறு
இந்நிலையில், செல்லூர் ராஜூ மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ‘கலிபோர்னியாவில் நடைமுறைப்படுத்திய திட்டத்தை முன் உதாரணமாக வைத்தே தமிழகத்தில் வைகை அணையில் தெர்மாகோல் விடும் திட்டத்தைச் செயல்படுத்தினேன். ஆனால் பொறியாளர் செய்த தவறால் விமர்சனங்கள் என்மீது திணிக்கப்பட்டு விட்டன. அதனால் நான் உலக அளவில் விஞ்ஞானியாகச் சித்தரிக்கப்பட்டு விட்டேன்’ என்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து செல்லூர் ராஜு விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: களைகட்டும் குறளரசன் திருமணம்: மகனுடன் சென்று சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்த டி.ஆர்