எனது மகனை வைத்து அரசியல் செய்கிறார்கள் – அற்புதம்மாள்
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யாததற்கு அரசியலே காரணம் எனப் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
திருவாரூர்: ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யாததற்கு அரசியலே காரணம் எனப் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுநருக்குப் பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் 7 தமிழர்கள் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கான கருத்தரங்கம் நடந்தது. அதில் பங்கேற்ற அற்புதம்மாள் கூறியதாவது;- ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு, ஆளுநருக்கு அழுத்தம் தர வேண்டும். அப்போதுதான் அவர்களது விடுதலைக்கு தீர்வு கிடைக்கும். 7 பேர் விடுதலைக்காகத் தமிழக அரசு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே அந்த அரசை குறை கூறவே முடியாது.7 பேரை விடுதலை செய்யாததற்கு காரணம் அரசியல் தான். எனது மகனை வைத்து அரசியல் செய்கிறார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விசாரணை அதிகாரியும் உச்சநீதிமன்றமும் தெரிவித்த பிறகு ஆளுநர் அந்த கோப்பில் ஏன் கையெழுத்திடவில்லை என்பது தெரியவில்லை. சட்டத்தை மதித்து 28 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை இனியாவது விடுதலை செய்ய வேண்டும்’ என்றார்.