எந்த வளர்ச்சியும் இல்லாத மோடி அரசுக்கு வாழ்த்துகள் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
உறுதியான தலைமை இல்லாமல் பறிபோன நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களும் வழிகாட்டுதலும் இல்லாத அரசுக்கு வாழ்த்துகள்
புதுடெல்லி: 100 நாள்களில் எந்த வளர்ச்சியும் இல்லாத மோடி அரசுக்கு வாழ்த்துகள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பாஜக அரசு இரண்டாவதாக மத்தியில் ஆட்சியைப் பிடித்து 100நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதில் பாஜக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை மசோதா போன்ற பல சாதனைகளைப் புரிந்துள்ளது என்று கட்சியினர் மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் எதிர்க்கட்சியினரோ பாஜக அரசு இந்த 100 நாட்களில் எதுவும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டி வருகின்றனர்.
Congratulations to the Modi Govt on #100DaysNoVikas, the continued subversion of democracy, a firmer stranglehold on a submissive media to drown out criticism and a glaring lack of leadership, direction & plans where it’s needed the most – to turnaround our ravaged economy.
— Rahul Gandhi (@RahulGandhi) September 8, 2019
இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘100 நாள்களில் எந்த வளர்ச்சியும் இல்லாத மோடி அரசுக்கு வாழ்த்துகள். ஜனநாயகத்தைத் தொடர்ச்சியாகக் கீழே தள்ளி அழித்து, ஊடகங்களின் விமர்சனங்களை மூழ்கச் செய்யும்படி குரல் வளையை நெறித்து, உறுதியான தலைமை இல்லாமல் பறிபோன நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களும் வழிகாட்டுதலும் இல்லாத அரசுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாஜக அரசின் 100 நாட்கள் ஆட்சி குறித்துக் கூறியுள்ள மோடி, ‘100 நாட்களில் நாட்டில் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. ஏராளமான சட்ட மசோதா தாக்கல் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 100 நாட்களில் பாஜக எடுத்த அதிரடி முடிவுகள் எதிர்காலத்தில் பாஜகவின் பெருமையைச் சொல்லும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.