எந்தெந்த ஆலயங்களில் அத்தி மரத்தாலான சிலைகள் இருக்கின்றன?

 

எந்தெந்த ஆலயங்களில் அத்தி மரத்தாலான சிலைகள் இருக்கின்றன?

ஆலயங்களில், அத்தி மரத்தில் தெய்வ சிலைகள் செய்வது பல காலங்களாகவே நடைமுறையில் இருந்து வருகிறது.

எந்தெந்த ஆலயங்களில் அத்தி மரத்தாலான சிலைகள் இருக்கின்றன?

ஆலயங்களில், அத்தி மரத்தில் தெய்வ சிலைகள் செய்வது பல காலங்களாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியே வருவதால், இன்றைய தலைமுறையினருக்கு அத்தி வரதர் விசேஷமானவராக தென்படுகிறார். அத்தி வரதர் விசேஷமானவர் தான். ஆனால், தமிழகம் முழுவதும் அத்தி வரதரைக் காண காஞ்சிபுரத்தில் குவிந்து, நெரிசலில் சிக்கி சின்னாப்பின்னமாவதை அத்தி வரதரே விரும்ப மாட்டார்.வேறு எந்த எந்த ஆலயங்களில் அத்தி மரத்தால் ஆன தெய்வ சிலைகள் இருக்கிறது என்கிற தகவல் நம் வாசகர்களுக்காக…

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் ஆலயத்தில், அம்மனின் முழு உருவச்சிலையும் அத்தி மரத்தினால் ஆனது. அதே போல், உடுப்பியில் இருக்கும் கிருஷ்ணர் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது தான். புதுச்சேரிக்கு அடுத்து உள்ள வீராம்பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரத்தை செங்கேணி அம்மன் சிலையாக வடித்து இன்றும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். இவ்வூரில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழா பிரெஞ்சு காலத்தில் இருந்து புகழ் பெற்றது. திருமலையில் (திருப்பதி) தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளி உள்ளார். 

வானமுட்டிப் பெருமாள் ஆலயம், மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழிகுத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவரை அத்தி மரத்தைக் கொண்டு 15 அடி உயரத்தில் சிலையாக வடித்திருக்கின்றனர். சங்கு, சக்கரம், கதை, அபயசீதம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமி விளங்க இந்த ஆல்யத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். பெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் ‘வானமுட்டிப் பெருமாள்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கிராமத்தின் பழைய பெர்யர் ‘பாப விமோசனபுரம்’ என்பதாகும்.
அத்தி, ஆறாவது கிரகமான சுக்ரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. வேலூரை அடுத்த பொன்னை, விநாயகபுரத்தில் நவக்கிரகங்களுக்கு ஒன்பது வகையான கோவில்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆலயம் ஸ்ரீ நவக்கிரக கோட்டை ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சுக்ரனை வணங்குவதற்காக அத்தி மரமும் நடப்பட்டுள்ளது. அசுர குரு சுக்ராச்சாரியார் அத்தி மரமாக மறுபிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என்பது புராண வரலாறு. அதனால் தான் அத்தி மரம் கூடுதல் விசேஷமாக கருதப்படுகிறது. 

மும்மூர்த்திகளின் ஒரே வடிவமாக பார்க்கப்படும் தத்தாத்ரேயர், அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு இன்றி வாழவும், கடைசி வரை பிரியாமல் இருப்பதற்கும், வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வருவது நல்லது என்பது ஐதீகம். அத்தி மரத்திற்கு நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும் சக்தி உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல், எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமோ, அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.