எடப்பாடிக்கு தடை போடும் அமைச்சர்கள்… அதிமுகவுக்குள் அதிர்ச்சி அரசியல்..!
எடப்பாடியின் செல்வாக்கு உயர்வதை பொறுத்துக் கொள்ள முடியாமலேயே மறைமுகமாக முதல்வருக்கு தடை போட்டு வருகிறார்கள் அமைச்சர்கள் எனக் கூறப்பட்டது.
மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது உடல்நிலை காரணமாக பல்வேறு திட்டங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக வெளிமாவட்டங்களில் தொடங்கி வைப்பார். ஆனால், தற்போதைய முதல்வர் எடப்பாடி பயணம் செய்ய அனைத்து வாய்ப்புகளும், ஆரோக்கியமாக இருந்தபோதும் அவற்றை தவிர்த்து விட்டு இவரும் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே நிகழ்ச்சிகளை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தொடங்கி வைப்பதை வழக்கமாக்கி விட்டார்.
காரணம், தங்கள் பகுதியில் கோலோச்ச நினைக்கும் அமைச்சர்கள். ‘எதுக்காக அலையுறீங்க… வீடியோ கான்பரன்சிங்ல தொடங்கி வைச்சிடுங்க. மத்தத நாங்க பார்த்துகிறோம்’ எனக் கூறி எடப்பாடியைத் தடுத்து வந்தார்கள். தங்கள் மாவட்டங்களுக்கு வந்து பெரிய அளவில் விழாக்கள் நடத்தி அதன் மூலம் எடப்பாடியின் செல்வாக்கு உயர்வதை பொறுத்துக் கொள்ள முடியாமலேயே மறைமுகமாக முதல்வருக்கு தடை போட்டு வருகிறார்கள் அமைச்சர்கள் எனக் கூறப்பட்டது.
கட்சி பிரச்சினைகள், மாநிலம் தழுவிய முக்கிய பிரச்சினைகள் பல இருப்பதால் அதை கவனிக்க நேரமின்றி இருக்கும் முதல்வர் இந்த மாவட்ட சுற்றுப் பயணங்கள் பற்றி யோசிக்கவே இல்லை. இப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி நடத்திய பாத யாத்திரை, கேரளாவில் பாஜக நடத்திய ஜனரக்ஷ யாத்திரை போல தமிழ்நாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களுடன் பேசுவது போன்ற திட்டமிடலுடன் ஒரு பயண ஏற்பாடுகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை முதல்வரை தங்களது மாவட்டங்களுக்கு அழைத்து பெரிய விழா எடுப்பதைத் தவிர்த்து வந்த அமைச்சர்கள் இந்த பயணத்திட்டத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதும் அவர்கள் எதிர்த்தாலும் அதை முதல்வர் எப்படி கையாளப் போகிறார் என்பதும் தான் அதிமுகவுக்குள் இப்போது நடந்து வரும் பட்டிமன்றமே.