ஊராட்சி தலைவர் பதவிக்காகச் சண்டை : வங்கி மேலாளரை அடித்துக் கொலை செய்த பயங்கரம் !
கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன் படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தைக் கூட்டிய அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு, ஊர் மக்கள் அனைவரையும் அழைக்காமல் அவரது ஆதரவாளர்களை மட்டும் அழைத்துக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த வங்கி மேலாளரான சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், சதீஷ்குமாருக்கும் ராமசுப்புவுக்கும் இடையே சண்டை வந்துள்ளது.
அந்த சண்டையில், ராமசுப்பு சதீஷ்குமாரைத் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். பலத்த காயம் ஏற்பட்டதால் அங்கேயே மயங்கி விழுந்த சதீஷ்குமாரைப் பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார், ராமசுப்பு உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.