ஊரடங்கு விளைவு: ரோந்து போலீசாருக்கு பயந்து ஓடிய மாணவன் – நெஞ்சில் கல் குத்தியதால் சாவு

 

ஊரடங்கு விளைவு: ரோந்து போலீசாருக்கு பயந்து ஓடிய மாணவன் – நெஞ்சில் கல் குத்தியதால் சாவு

ஊரடங்கு நேரத்தில் விளையாடிய சிறுவன் ரோந்து போலீசாருக்கு பயந்து ஓடியபோது கீழே விழுந்ததன் காரணமாக இறந்தான்.

உளுந்தூர்பேட்டை: ஊரடங்கு நேரத்தில் விளையாடிய சிறுவன் ரோந்து போலீசாருக்கு பயந்து ஓடியபோது கீழே விழுந்ததன் காரணமாக இறந்தான்.

ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போலீசாருக்கு தெரியாமல் ஏரிகள் மற்றும் மைதானங்களில் மறைவாக விளையாடி வருகின்றனர். மேலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான சில இடங்களில் மாணவர்கள் போலீசார் கண்களில் சிக்காமல் விளையாடி வருகின்றனர். உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மாடல் காலனி பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மகன் இளந்தமிழன் (வயது 15) அரசு மாதிரிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் போலீசாரைக் கண்டு பயந்து போன இளந்தமிழன் உள்ளிட்ட சில மாணவர்கள் ஓடியுள்ளனர். அப்போது இளந்தமிழன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளான்.

அதன் பிறகு கடந்த 3 தினங்களாக இளந்தமிழனால் நடக்க முடியவில்லை எனக் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். அத்துடன் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக பெற்றோரிடம் நேற்று முன்தினம் இரவு இளந்தமிழன் கூறியுள்ளான். இதையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றனர். அங்கு அவனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இளந்தமிழன் நெஞ்சில் கல் ஒன்று குத்தியதால் இதயத்தில் ரத்தக்கட்டி ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இளந்தமிழன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.