உலகக்கோப்பை வெற்றியை இந்தியா ருசித்த தினம் இன்று!
உலகக் கோப்பை வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியா ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருந்தது.
உலகக் கோப்பை வரலாற்றில் 1983 ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியா ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருந்தது.
1983 ஆம் ஆண்டு, ஜூன் 25 ஆம் நாள்.. அன்றுதான் பல கோடி மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை களம் கண்டது. இருமுறை சாம்பியன் பட்ட வென்ற அணி என்பதோடு மட்டுமல்லாது, அசைக்க முடியாத பலம் பொருந்திய அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி வலம் வந்த காலம் அது. அன்றைய கால கட்டத்தில்தான் இந்திய அணி அவர்களை எதிர்த்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் களம் கண்டது.
கபில் தேவ் தலைமையில் களமிறங்கி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன்களைச் சேர்க்க திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவர்களில் இந்திய அணி 55 ஆவது ஓவரிலேயே ஆல் அவுட் ஆகி 183 ரன்களை மட்டுமே சேர்த்தது.
எளிமையான இலக்கு. பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸுக்கு வெற்றி நிச்சயம். அவர்கள் 3 ஆவது முறை சாம்பியன் ஆவது உறுதி என இந்திய ரசிகர்கள் கவலையில் துவண்டனர்.
இறுதி வரை போராடும் குணத்தை மனதில் ஏற்றிக் கொண்ட இந்திய அணி, தொடக்கம் முதலே வெஸ்டீஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தது. தொடக்க விக்கெட்டுகளை குறைந்த இடைவெளியில் வீழ்த்தியும் அசத்தியது. இருப்பினும் மறுமுனையில் 7 பவுண்டரிகளை அடித்து அதிரடி காட்டிக் கொண்டிருந்தார் விவியன் ரிச்சார்டு. அந்த அணி 57 ரன்கள் எடுத்திருந்த போது அவரது விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றிக்கான முதல் படியில் ஏறியது இந்தியா. சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ், 140 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பை சாம்பியன் மகுடத்தைச் சூடியது.