உடலில் டாட்டூ குத்தியதால் மனைவியை கொன்ற கணவன்…புழலில் நடந்த பயங்கரம்!
இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜனனி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
புழல் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவீரன். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜனனி என்பவரை கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கல்லூரிக்கு செல்லும் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.வெற்றி வீரன் அச்சகத்திலும், ஜனனி அழகுநிலையத்திலும் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனிடையே ஜனனிக்கும் வெற்றிவீரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜனனி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் சென்ற வெற்றிவீரன் சமாதானம் பேசி மனைவியை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து இருவரும் மகள்களுடன் சந்தோஷமாக இருந்துள்ளனர். இருப்பினும் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவி இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. விடிய,விடிய நடந்த இந்த சண்டையில் ஆத்திரமடைந்த வெற்றிவீரன் கத்தியால் மனைவியை குத்திக்கொலைசெய்துவிட்டு புழல் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜனனி அழகாக இருப்பார். இதனால் தான் அவளை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அவள் என்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு உடலில் டாட்டூ குத்தியிருந்தாள். அதனால் அதுகுறித்து கேட்டபோது தான் எங்களுக்கு சண்டை ஏற்பட்டு கொலை செய்தேன்’ என்று கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.