உச்ச நீதிமன்றத்தில் இன்று சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்குகிறது….

 

உச்ச நீதிமன்றத்தில் இன்று சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்குகிறது….

உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று முதல் சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை தொடங்குகிறது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மிகவும் பிரபலமானது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஐயப்ப பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து சபரிமலை வந்து அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு செல்வர். சபரிமலையில் பெண்களும் சென்று வழிபடலாம். ஆனால் 10 வயதுக்குள் அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை சென்று அய்யப்பனை வழிபட முடியும். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்தவற்கு தடை உள்ளது. இந்த தடை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பெண் பக்தர்கள்

இந்நிலையில் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து கடும் பாதுகாப்புக்கு இடையே ஒரு சில பெண்கள் மட்டுமே சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை செல்ல முயன்ற பெரும்பாலான பெண்கள் கடும் எதிர்ப்பு காரணமாக பாதி வழியில் திரும்பினர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே

இதற்கிடையே உச்ச  நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த நவம்பர் 14ம் தேதி மறுசீராய்வு மனுக்களை பரிசீலனை செய்த அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு அந்த மனுக்களை 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வரும் 13ம் தேதி (இன்று) முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை மறுசீராய்வு மனுக்கள் விசாரிக்கும் என கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் தகவல் தெரிவித்தது. இதன்படி, இன்று முதல் உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு சபரிமலை தொடர்பான அனைத்து மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை இன்று தொடங்குகிறது.