உச்ச நீதிமன்றத்தில் இன்று ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை…..
ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஊழல் வழக்குகளில் முன்ஜாமீன் கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் கொடுக்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுக்க உள்ளது.
ப.சிதம்பரம் முன்பு மத்திய நிதியமைச்சராக இருந்த போது அவரது உதவியால் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் விதிமுறைக்கு புறம்பாக வெளிநாட்டு முதலீட்டை பெற்றதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பிரிவுகள் வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதனை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டது. மேலும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என கடந்த 21ம் தேதி கூறியது. இதனையடுத்து அன்று இரவை சி.பி.ஐ. அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தனர். அதற்கு அடுத்த நாள் சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.
இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமையன்று, உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தது. மேலும், அதனுடன் சி.பி.ஐ. கைது நடவடிக்கையை எதிர்த்து ப.சிதம்பரத்தின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை வழங்கியது. மேலும், அந்த மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தது.
இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா அமர்வு முன் இன்று ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதனுடன் ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் விசாரணை நீதிமன்றம் தனக்கு எதிராக கைது வாரண்ட் வழங்கியது மற்றும் சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்படும் புதிய மனுவையும் இந்த உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணைக்கு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.