ஈழப் பிரச்னை; திமுக-காங்கிரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன பொதுக் கூட்டம்

 

ஈழப் பிரச்னை; திமுக-காங்கிரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன பொதுக் கூட்டம்

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுக – காங்கிரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது

சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுக – காங்கிரசை கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்தியா உதவியதாக, அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே சமீபத்தில் கூறியிருந்தார்.

இதையடுத்து, அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், துணை முதல்வர் ஒ.பண்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. அதில், இலங்கை தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட காரணமாக இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணியை சர்வதேச போர் குற்றவாளிகள் என கருதி தண்டனை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், திமுக மற்றும் காங்கிரசை போர்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 25-ம் தேதி (இன்று) போராட்டம் நடத்தப்படும் எனவும் அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.