இளையராஜாவுக்காக அனைத்து படைப்பாளிகளும் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுக்கூட பாரதிராஜா அழைப்பு!
இசையமைப்பாளர் இளையராஜா, பல வருடங்களாக சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவை பயன்படுத்திவருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா, பல வருடங்களாக சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவை பயன்படுத்திவருகிறார். இந்நிலையில் அண்மையில் அந்த கட்டடம் தொடர்பாக இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளையராஜாவின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அவருக்கு ஆதரவாக பாரதிராஜா கைக்கோர்த்துள்ளார்.
இதுதொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “பாசத்துக்குரிய படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களே….வணக்கம்… அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் “இசைஞானி திரு.இளையராஜா” அவர்களுக்கும்,பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் திரு.இளையராஜா அவர்களின் திரைப்பட ஒலிப்பதிவு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது.இது மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்வாகும். ஆகையால் மீண்டும் இசைப்பணிகளை அங்கு தொடர்ந்திட, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் விதமாக அனைத்து படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் 28.11.2019
(வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.