இலங்கை காவல்துறை தலைவர், பாதுகாப்பு செயலர் ராஜினாமா; அதிபர் சிறிசேன அதிரடி!

 

இலங்கை காவல்துறை தலைவர், பாதுகாப்பு செயலர் ராஜினாமா; அதிபர் சிறிசேன அதிரடி!

இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் குறித்த உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அந்நாட்டு அரசு மன்னிப்பு கோரியுள்ளது

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, அந்நாட்டு காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாப்புத்துறை செயலரை ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

srilanka attack

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ருவன் விஜேவர்தனே தெரிவித்துள்ளார். அதேசமயம், தாக்குதல் குறித்த உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அந்நாட்டு அரசு மன்னிப்பும் கோரியுள்ளது.

srilanka attack

அதேசமயம், தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று கூறியிருந்தார். அதேபோல், உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது குறித்து தமது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும், பாதுகாப்பு படையின் மூத்த பதவிகளில் உடனடியாக மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் அதிபா் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

srilanka attack

முன்னதாக, கொழும்புவின் வெள்ளவெத்தை பகுதியில் சவாய் திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு இன்று கண்டெடுக்கப்பட்டு, செயலிழக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகது.

இதையும் வாசிங்க

இஸ்லாமியர்கள் உயிருக்கு அச்சுறுத்தல்; என்ன நடக்கிறது இலங்கையில்?!…