இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகும் இந்தியா: கொல்கத்தாவில் ஸ்டாலின் பேச்சு
மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பது தான் நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கொல்கத்தா: மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பது தான் நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில், நாட்டின் முக்கிய தலைவர்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.
இந்தியா முழுவதிலும் இருந்து 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த கூட்டத்தில் பெங்காலியில் தன் பேச்சை தொடங்கிய ஸ்டாலினின் முழு பேச்சு:
வங்க புலிகளுக்கு எனது வணக்கம். வங்கத்து விவேகானந்தருக்கு குமரியில் நினைவு மண்டம் அமைத்துள்ளோம். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகமும் வங்கமும் முக்கிய பங்காற்றி உள்ளது.
மே மாதம் வரவிருக்கும் பொதுத் தேர்தல் நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக இருக்கும் இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜியின் அழைப்பின் பேரில் இங்கு வந்துள்ளேன். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை மீட்பதுதான் இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம்.
இந்த மேடையில் நான் இந்தியாவை பார்க்கிறேன். வேறு மொழியை சேர்ந்தவர்களும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு அமர்ந்து உள்ளார்கள். வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் தாரக மந்திரம்.
மம்தா பானர்ஜி இரும்பு பெண் மணி ஆவார். எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் பிரதமர் மோடிக்கு பயமாக இருக்கிறது. பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. நமது ஒற்றுமை மோடியை பயங்கொள்ள வைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை காப்போம்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் மோடி நூறு கூட்டங்களில் பேசினால் ஆயிரம் பொய்களை சொல்லி இருப்பார். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது இதுதான் மோடியின் சாதனை.
It’s been more than three hours since #UnitedIndiaAtBrigade rally started. People are patiently sitting at the venue, listening to every speech by national leaders pic.twitter.com/afkFjAWI65
— All India Trinamool Congress (@AITCofficial) January 19, 2019
இது மக்களுக்கான ஆட்சி அல்ல இது கார்ப்பரேட் அரசு. வங்கியில் ரூ. 15 லட்சம் பணத்தை போடுவேன் என்றவர் மக்களின் தலையில் கல்லை போட்டார். வாயில் மண்ணைப் போட்டார். ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெறவில்லையா? ரூ,.1000 ரூ.500 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்ததன் பின்னணியில் ஊழல், இல்லையா?
பாஜகவை தனியாக வீழ்த்த முடியாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். நரேந்திர மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. இந்த சிறப்பான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மம்தா பானர்ஜிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.