இன்று ஓய்வை அறிவிக்கிறாரா தோனி : ரசிகர்கள் அதிர்ச்சி!
தோனியை புகழ்ந்து பேசி இருக்கிறார் கோலி. அதனால் தோனி ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ஓய்வு பெறப் போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகின்றன.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பையை பெற்று தந்துள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஒரு விக்கெட் கீப்பராக தனது பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறார். தற்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்தி வருகிறார். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தோனி ஒரு சீனியர் வீரராக ஆலோசனைகளை வீரர்களுக்கு வழங்கி வருகிறார். அதனால் தான் இந்த கூல் கேப்டனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இன்றிரவு 7 மணிக்கு தோனி செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாகவும் அதில் தனது ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இந்த செய்தி பரவ கோலி இன்று வெளியிட்ட புகைப்படமும் ஒரு காரணம் தான்.
A game I can never forget. Special night. This man, made me run like in a fitness test ? @msdhoni ?? pic.twitter.com/pzkr5zn4pG
— Virat Kohli (@imVkohli) September 12, 2019
அதனால் தோனி ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தோனி ரசிகர்கள் #DhoniInBillionHearts மற்றும் #MSDhoni போன்ற ஹேஷ்டாக்குகளை இந்திய அளவில் டிரெண்ட்டாக்கியதோடு ஓய்வு பெற வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
முன்னதாக தோனி 2019 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் தனது ஓய்வு குறித்து வாய்திறக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் தான் இரண்டு மாத காலம் ஓய்வில் சென்ற தோனி தனது நேரத்தை ராணுவத்தில் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் தோனி தனது ஓய்வை அறிவிக்கப்போகிறாரா அல்லது இந்த செய்தி வெறும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.