இன்னிங்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி!
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இரு அணிகளும் மோதிய 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது வேகத்தில் மிரட்டியதால், 106 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து இரு தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை இழந்ததால் சற்று தடுமாற்றம் கண்டது.
பின்னர் ஜோடி சேர்ந்த புஜரா மற்றும் விராட் கோலி இருவரும் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். புஜாரா 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் விராட் கோலி அரைசதம் கண்டார். அடுத்ததாக வந்த ரஹானே 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இச்சமயம் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
விராட் கோலி 132 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 241 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணிக்கு முதல் நான்கு விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. பின்னர் வந்த ரஹீம் மற்றும் மகமதுல்லா இருவரும் சற்று நிலைத்து ஆட முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இரண்டாம் நாள் முடிவில் 152 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று மதியம் துவங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தின் சிறிது நேரத்திலேயே இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணியை இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தனர்.
தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய அணி, இதன் மூலம் புதிய வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.