இந்த அரிசியை மனுஷன் சாப்பிட முடியுமா?..ரேஷன் அரிசியைச் சாலையில் கொட்டிய நபர் மீது வழக்குப்பதிவு!
ரமணி(60) என்பவர் அப்பகுதியில் உள்ள குத்தாலம் கடைவீதியில் உள்ள ரேஷன் கடையில் 20 கிலோ இலவச அரிசி வாங்கியுள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள குத்தாலம் என்னும் பகுதியைச் சேர்ந்த ரமணி(60) என்பவர் அப்பகுதியில் உள்ள குத்தாலம் கடைவீதியில் உள்ள ரேஷன் கடையில் 20 கிலோ இலவச அரிசி வாங்கியுள்ளார். வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்ற அவர், பாதி வழியில் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த 20 கிலோ அரிசியையும் சாலையில் கொட்டியுள்ளார். அவ்வழியே சென்ற பெண், ஏன் கீழே காட்டுகிறீர்கள் என்று ரமணியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ” என்னம்மா அரிசி இது.. குண்டு குண்டா போடுறானுங்க.. இதில் சோறு வெடிச்சு மனுஷன் சாப்பிட முடியுமா.. அதான் ஆடு மாடாவது சாப்பிடட்டும்னு ரோட்டுல கொட்டுறேன்” என்று கூறியுள்ளார்.
இதனை ஒரு நபர் வீடியோ எடுத்ததைக் கண்ட ரமணி அதனை சமூக வலைத்தளங்களில் போடும் படி கூறியுள்ளார். ரமணி சாலையில் அரிசியைக் கொட்டிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அதனைக் கண்ட, குத்தாலம் வட்ட வழங்கல் அலுவலர், குறிப்பிட்ட அந்த ரேஷன் கடை ஊழியரிடம், சாலையில் அரிசியைக் கொட்டியவர் மீது புகார் அளிக்கும் படி கூறியுள்ளார். அதனையடுத்து, ரேஷன் கடை ஊழியர் அறிவழகன் நேற்று குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனால், ரமணி மீது அரசுத் திட்டத்தை அவமானப் படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.