இந்தியா குறித்த சர்ச்சை கருத்து; ரசிகர்களின் எதிர்ப்பினால் பல்டி அடித்த ஹாமில்டன்

 

இந்தியா குறித்த சர்ச்சை கருத்து; ரசிகர்களின் எதிர்ப்பினால் பல்டி அடித்த ஹாமில்டன்

இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது கருத்து குறித்து பார்முலா1 கார் பந்தயத்தில் 5 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் விளக்கம் அளித்துள்ளார்

லண்டன்: இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தனது  கருத்து குறித்து பார்முலா1 கார் பந்தயத்தில் 5 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புத் சர்வதேச ஓடுதளத்தில் 2011, 2012, 2013 ஆகிய 3 ஆண்டுகள் பார்முலா1 கார் பந்தயம் நடந்தது. அதன் பிறகு சில நடைமுறை சிக்கல் காரணமாக இந்தியாவில் பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில், பார்முலா1 கார் பந்தயத்தில் 5 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் அண்மையில் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பார்முலா1 பந்தயத்தை நடத்த இந்தியா உகந்த நாடு இல்லை என்பது போல் கருத்து தெரிவித்தார். இந்தியா ஒரு ஏழை நாடாக இருந்தாலும், அங்கேயும் ஒரு பிரமாண்டமான பார்முலா1 கார் பந்தய ஓடுதளம் இருப்பது பெரிய முரண்பாடாக தெரிகிறது. அங்கு போட்டியில் பங்கேற்ற போது எனக்கே தர்மசங்கடமாக இருந்தது என ஹாமில்டன் தெரிவித்தார்.

இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஹாமில்டனுக்கு பொது அறிவு இல்லை என ரசிகர்கள் விமர்சித்தனர். இதையடுத்து, தனது கருத்தில் இருந்து பின்வாங்கி அது  குறித்து விளக்கம் அளித்துள்ள ஹாமில்டன், எனது கருத்தால் சிலர் அதிருப்தி அடைந்து இருப்பதாக அறிகிறேன். உலகத்தில் உள்ள மிகவும் அழகான இடங்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

பொருளாதாரத்தில் வேகமாக இந்தியா வளர்ந்து வந்தாலும், அங்கு ஏழ்மையும் அதிகம் இருக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் அதிகம் இருக்கும் நிலையில் அங்கு ஒரு கிராண்ட்பிரி பந்தயத்தில் பிரமாண்டமான அரங்கில் நுழைந்தது எனக்கு வித்தியாசமாகவே தோன்றியது.

தற்போது பயன்பாட்டில் இல்லாத ஒரு ஓடுதளத்துக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார்கள். அந்த பணத்தை பள்ளிகளுக்கோ, வீடு இல்லாத மக்களுக்கோ செலவு செய்து இருக்கலாம். நான் அங்கு போட்டியில் கலந்து கொண்ட போது டிக்கெட் விலை அதிகம் என்பதால் பந்தயத்தை பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் அங்கு சில அற்புதமான ரசிகர்களை சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.