இந்தியாவில் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிப்பு? – அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பதிவில் தகவல்
இந்தியாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்திருப்பதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்திருப்பதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.
வீடியோ மூலம் 13 மாநில முதல்வர்களுடன் நான்கு மணி நேர சந்திப்பை பிரதமர் மோடி இன்று நடத்தினார். அதில் நாடு முழுக்க ஊரடங்கை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி சரியான முடிவை எடுத்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
PM has taken correct decision to extend lockdown. Today, India’s position is better than many developed countries because we started lockdown early. If it is stopped now, all gains would be lost. To consolidate, it is imp to extend it
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 11, 2020
இதுகுறித்து அவர் பதிவில், “ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் சரியான முடிவை எடுத்துள்ளார். பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் இன்றைய நிலைப்பாடு சிறந்தது. ஏனெனில் நாம் ஆரம்பத்திலேயே ஊரடங்கை தொடங்கி விட்டோம். இப்போது நிறுத்தினால் அனைத்து பலன்களையும் இழந்து விடுவோம். எனவே ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியம்” என பிரதமர் உடனான வீடியோ சந்திப்புக்கு பிறகு சில நிமிடங்களில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
இதனால் இந்தியாவில் அடுத்த இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பது ஏறத்தாழ உறுதி ஆகியுள்ளது. பிரதமர் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.