‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்’ : ‘அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் வேதனை!
2 வயது குழந்தை நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
திருச்சி : மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது குறித்து இயக்குநர் கோபி நயினார் வேதனை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் வீட்டு தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனால் குழந்தையை மீட்கும் பணியில் கடந்த 13 மணிநேரமாகத் தீயணைப்பு படையினரும், போலீசாரும் போராடி வருகின்றனர்.
குழந்தை சுர்ஜித் விழும் போது குழந்தை 26 அடியிலிருந்த நிலையில், தற்போது சுர்ஜித் 68 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் காலை 7:30 அல்லது 8 மணிக்குள் நடுக்காட்டுப்பட்டிக்கு வரவுள்ளார்கள்.
இந்நிலையில் அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் கூறும் போது, ‘இது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு சம்பவம். சாதாரண மக்களை கஷ்டங்களைப் போக்கும் அளவிற்கு நம்மிடம் அறிவியல் இல்லை. தனிநபரின் சாகசம் நமக்கு பயன்தராது. தொழில்நுட்ப கருவிகளும் நமக்கு போதிய நவீன வசதியுடன் இல்லை. அதனால் கூட்டு முயற்சியால் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது. குழந்தை விழுந்த 10 நிமிடத்தில் மீட்க தேவையான அறிவியல் தொழில்நுட்பம் நம்மிடம் வேண்டும். 68 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க முடியாது என்பது வேதனை. போலீசார், மீட்புப்படையினர் என அனைவரும் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப கருவிகள் இல்லை’ என்றார்.