ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை: 3 நாட்களை தாண்டி தொடரும் மீட்புப் போராட்டம்!

 

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை: 3 நாட்களை தாண்டி தொடரும் மீட்புப் போராட்டம்!

பஞ்சாப் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தான். அங்கு துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக கால் வைத்த குழந்தை உள்ளே சிக்கினான்.

பஞ்சாப் சங்க்ரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை 2 வயது குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தான். அங்கு துணியால் மூடப்பட்டிருந்த 150 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக கால் வைத்த குழந்தை உள்ளே சிக்கினான். உடனடியாக அவனது அம்மா குழந்தையை மீட்க போராடியுள்ளார். ஆனால் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்துக்கு சென்றுவிட்டான்.

இது குறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மீட்புப்படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் ஆழ்துளை கிணறு 150 அடி ஆழம் என்பதால் குழந்தையை மீட்கும் பணி சவாலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 3 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் குழந்தையை மீட்க மீட்புப்படை அதிகாரிகளும், ராணுவத்தினரும் போராடி வருகின்றனர். ஆழ்துறை கிணற்றுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆழ்துறை கிணற்றுக்குள் சிறிய கேமரா செலுத்தப்பட்டு குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறான். மேலும் ஆக்சிஜனும் உள்ளே செலுத்தப்படுகிறது. குழந்தை மயக்கநிலையில் இருப்பதாகவும் விரைவில் மீட்கப்படுவான் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய மருத்துவர்கள் குழு தயார் நிலையில் உள்ளது என்றும் குழந்தை மீட்கப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

ஆழ்துறை கிணற்றில் சிக்கிய தன் மகனுக்கு இன்று பிறந்தநாள் என்றும், அவன் உயிருடன் மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் சிறுவனின் தாயார் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென பஞ்சாப் மக்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.